நம்மாழ்வார் அருளிச் செய்த திருவிருத்தம்
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்
கிடாம்பியாச்சான் அருளிச் செய்தது
கட்டளை கலித்துறை
கருவிருத்தத் குழிநீத்தபின் காமக்கடுங் குழிவீழ்ந்து,
ஒருவிருத்தம் புக்குழலுறுவீர்* உயிரின் (*)பொருள்கட்கு,
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர் கோனுரைத்த,
திருவிருத்தத் தோரடிகற்று இரிர்திரு நாட்டகத்தே.

(*) பொருளுக்கு என்பதும் பாடம்.
திருவிருத்தம்
2478
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா
    வொழுக்கும் அழுக்குடம்பும்,
இந்நின்ற நீர்மை இனியா
    முறாமை, உயிரளிப்பான்
எந்நின்ற யோனியு மாய்ப்பிறந்
    தாயிமை யோர்தலைவா*
மெய்ந்நின்று கேட்டரு ளாய்,அடி
    யேன்செய்யும் விண்ணப்பமே.#
1
2479
செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந்
    தாலொப்ப, சேயரிக்கண்
அழுநீர் துளும்ப அலமரு
    கின்றன, வாழியரோ
முழுநீர் முகில்வண்ணன் கண்ணன்விண்
    ணாட்டவர் மூதுவராம்
தொழுநீ ரிணையடிக் கே,அன்பு
    சூட்டிய சூழ்குழற்கே.
2
2480
குழல்கோ வலர்மடப் பாவையுமட்
    மண்மக ளும்திருவும்,
நிழல்போல் வனர்கண்டு நிற்குங்கொல்
    மீளுங்கொல், தண்ணந்துழாய்
அழல்போ லடும்சக்க ரத்தண்ணல்
    விண்ணோர் தொழக்கடவும்
தழல்போல் சினத்த,அப் புள்ளின்பின்
    போன தனிநெஞ்சமே.
3
2481
தனிநெஞ்சம் முன்னவர் புள்ளே
    கவர்ந்தது, தண்ணந்துழாய்க்
கினிநெஞ்ச மிங்குக் கவர்வது
    யாமிலம், நீநடுவே
முனிவஞ்சப் பேய்ச்சி முலைசுவைத்
    தான்முடி சூடுதுழாய்ப்
பனிநஞ்ச மாருத மே,எம்ம
    தாவி பனிப்பியல்வே?
4
2482
பனிப்பியல் வாக வுடையதண்
    வாடை,இக் காலமிவ்வூர்
பனிப்பியல் வெல்லாம் தவிர்ந்தெரி
    வீசும்,அந் தண்ணந்துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி
    மாமைத்தி றத்துக்கொலாம்
பனிப்புயல் வண்ணன்,செங் கோலொரு
    நான்று தடாவியதே?
5
2483
தடாவிய அம்பும் முரிந்த
    சிலைகளும் போகவிட்டு,
கடாயின கொண்டொல்கும் வல்லியீ
    தேனும், அசுரர்மங்கக்
கடாவிய வேகப் பறவையின்
    பாகன் மதனசெங்கோல்
நடாவிய கூற்றங்கண் டீர்,உயிர்
    காமின்கள் ஞாலத்துள்ளே.
6
2484
ஞாலம் பனிப்பச் செறித்து,நன்
    னீரிட்டுக் கால்சிதைந்து
நீலவல் லேறு பொராநின்ற
    வான மிது,திருமால்
கோலமம் சுமந்து பிரிந்தார்
    கொடுமை குழறுதண்பூங்
காலங்கொ லோவறி யேன்,வினை
    யாட்டியேன் காண்கின்றவே?
7
2485
காண்கின் றனகளும் கேட்கின்
    றனகளும் காணில்,இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்
    றன,இதெல் லாமறிந்தோம்
மாண்குன்ற மேந்திதண் மாமலை
    வேங்கடத் தும்பர்நம்பும்
சேண்குன்றம் சென்று, பொருள்படைப்
    பான்கற்ற திண்ணனவே.
8
2486
திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ்
    செல்வர்,விண் னாடனைய
வண்பூ மணிவல்லி யாரே
    பிரிபவர் தாம், இவையோ
கண்பூங் கமலம் கருஞ்சுட
    ராடிவெண் முத்தரும்பி
வண்பூங் குவளை, மடமான்
    விழிக்கின்ற மாயிதழே.
9
2487
மாயோன் வடதிரு வேங்கட
    நாட,வல் லிக்கொடிகாள்*
நோயோ வுரைக்கிலும் கேட்கின்றி
    லீருரை யீர்,நுமது
வாயோ அதுவன்றி வல்வினை
    யேனும் கிளியுமெள்கும்
ஆயோ அடும்தொண்டை யோ,அறை
    யோவி தறிவரிதே.
10
2488
அரியன யாமின்று காண்கின்
    றன,கண்ணன் விண்ணனையாய்*
பெரியன காதம் பொருட்கோ
    பிரிவென, ஞாலமெய்தற்
குரியன வெண்முத்தம் பைம்பொன்னு
    மேந்தியொ ரோகுடுங்கைப்
பெரியன கெண்டைக் குலம்,இவை
    யோவந்து பேர்கின்றவே?
11
2489
பேர்கின் றதுமணி மாமை,
    பிறங்கியள் ளல்பயலை
ஊர்கின் றதுகங்குல் ஊழிக
    ளே,இதெல் லாமினவே
ஈர்கின்ற சக்கரத் தெம்பெரு
    மான்கண்ணன் தண்ணந்துழாய்
சார்கின்ற நன்னெஞ்சி னார்,தந்து
    போன தனிவளமே.
12
2490
தனிவளர் செங்கோல் நடாவு,
    தழல்வாய் அரசவியப்
பனிவளர் செங்கோ லிருள்வீற்
    றிருந்தது, பார்முழுதும்
துனிவளர் காதல் துழாயைத்
    துழாவுதண் வாடைதடிந்
தினிவளை காப்பவ ரார்,எனை
    யூழிக ளீர்வனவே.
13
2491
ஈர்வன வேலுமஞ் சேலும்,
    உயிர்மேல் மிளிர்ந்திவையோ
பேர்வன வோவல்ல தெய்வநல்
    வேள்கணை, பேரொளியே
சோர்வன நீலச் சுடர்விடும்
    மேனியம் மான்விசும்பூர்
தேர்வன, தெய்வமன் னீரகண்
    ணோவிச் செழுங்கயலே?
14
2492
'கயலோ நுமகண்கள்?' என்று
    களிறு வினவிநிற்றீர்,
அயலோர் அறியிலு மீதென்ன
    வார்த்தை, கடல்கவர்ந்த
புயலோ டுலாம்கொண்டல் வண்ணன்
    புனவேங் கடத்தெம்மாடும்
பயலோ விலீர்,கொல்லைக் காக்கின்ற
    நாளும் பலபலவே.
15
2493
பலபல வூழிக ளாயிடும்,
    அன்றியோர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறாயி
    டும்,கண்ணன் விண்ணனையாய்*
பலபல நாளன்பர் கூடிலும்
    நீங்கிலும் யாம்மெலிதும்
பலபல சூழ லுடைத்து,அம்ம*
    வாழியிப் பாயிருளே.
16
2494
இருள்விரிந் தாலன்ன மாநீர்த்
    திரைகொண்டு வாழியரோ
இருள்பிரிந் தாரன்பர் தேர்வழி
    தூரல், அரவணைமேல்
இருள்விரி நீலக் கருநா
    யிறுசுடர் கால்வதுபோல்
இருள்விரி சோதிப், பெருமா
    னுறையு மெறிகடலே*
17
2495
கடல்கொண் டெழுந்தது வானம்அவ்
    வானத்தை யன்றிச்சென்று
கடல்கொண் டெழுந்த வதனா
    லிது,கண்ணன் மண்ணும்விண்ணும்
கடல்கொண் டெழுந்தவக் காலங்கொ
    லோ*புயற் காலங்கொலோ*
கடல்கொண்ட கண்ணீர், அருவிசெய்
    யாநிற்கும் காரிகையே.
18
2496
காரிகை யார்நிறை காப்பவர்
    யாரென்று, கார்கொண்டின்னே
மாரிகை யேறி அறையிடும்
    காலத்தும், வாழியரோ
சாரிகைப் புள்ளர்அந் தண்ணந்
    துழாயிறை கூயருளார்
சேரிகை யேறும், பழியா
    விளைந்ததென் சின்மொழிக்கே.
19
2497
சின்மொழி நோயோ கழிபெருந்
    தெய்வம்,இந் நோயினதென்
றின்மொழி கேட்கு மிளந்தெய்வ
    மன்றிது, வேல*நில்நீ
என்மொழி கேண்மினென் அம்மனை
    மீர்*உல கேழுமுண்டான்
சொல்மொழி, மாலையந் தண்ணந்து
    ழாய்கொண்டு சூட்டுமினே.
20
2498
(*)சூட்டுநன் மாலைகள் தூயன
    வேந்தி,விண் ணோர்கள்நன்னீர்
ஆட்டியந் தூபம் தராநிற்க
    வேயங்கு,ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப்
    போந்திமி லேற்றுவன்கூன்
கோட்டிடை யாடினை கூத்துஅட
    லாயர்தம் கொம்பினுக்கே.

(*) இது திருமஞ்சனக் காலத்தில் சேவிப்பது
21
2499
கொம்பார் தழைகை சிறுநா
    ணெறிவிலம் வேட்டைகொண்டாட்
டம்பார் களிறு வினவுவ
    தையர்புள் ளூரும்கள்வர்
தம்பா ரகத்தென்று மாடா
    தனதம்மில் கூடாதன
வம்பார் வினாச்சொல்ல வோ,எம்மை
    வைத்ததிவ் வான்புனத்தே?
22
2500
புனமோ புனத்தய லேவழி
    போகும் அருவினையேன்,
மனமோ மகளிர்நுங் காவல்சொல்
    லீர்,புண்ட ரிகத்தங்கேழ்
வனமோ ரனையகண் ணான்கண்ணன்
    வானா டமரும்தெய்வத்
தினமோ ரனையீர்க ளாய்,இவை
    யோநும் இயல்புகளே?
23
2501
இயல்வா யினவஞ்ச நோய்கொண்
    டுலாவும், ஒரோகுடங்கைக்
கயல்பாய் வனபெரு நீர்க்கண்கள்
    தம்மொடும், குன்றமொன்றால்
புயல்வா யினநிரை காத்தபுள்
    ளூர்திகள் ளூரும்துழாய்க்
கொயல்வாய் மலர்மேல், மனத்தொடென்
    னாங்கொலெம் கோல்வளைக்கே?
24
2502
எங்கோல் வளைமுத லா,கண்ணன்
    மண்ணும்விண் ணும்அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்கும்
    மால்,திறல் சேரமரர்
தங்கோ னுடையதங் கோனும்ப
    ரெல்லா யவர்க்கும்தங்கோன்
நங்கோ னுகக்கும் துழாய்,என்செய்
    யாதினி நானிலத்தே?
25
2503
நானிலம் வாய்க்கொண்டு நன்னீ
    ரறமென்று கோதுகொண்ட,
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ்
    பாலை, கடந்தபொன்னே*
கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும்
    கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்
தேனிளஞ் சோலையப் பாலது,எப்
    பாலைக்கும் சேமத்ததே.
26
2504
சேமம்செங் கோனரு ளே,செரு
    வாரும்நட் பாகுவரென்
றேமம் பெறவையம் சொல்லும்மெய்
    யே,பண்டெல் லாம்மறைகூய்
யாமங்க டோறெரி வீசும்நங்
    கண்ணனந் தண்ணந்துழாய்த்
தாமம் புனைய,அவ் வாடையீ
    தோவந்து தண்ணென்றதே.
27
2505
தண்ணந் துழாய்வளை கொள்வது
    யாமிழப் போம்,நடுவே
வண்ணம் துழாவியோர் வாடை
    யுலாவும்,வள் வாயலகால்
புள்நந் துழாமே பொருநீர்த்
    திருவரங் கா*அருளாய்
எண்ணந் துழாவு மிடத்து,உள
    வோபண்டும் இன்னன்னவே?
28
2506
இன்னன்ன தூதெம்மை ஆளற்றப்
    பட்டிரந் தாளிவளென்று,
அன்னன்ன சொல்லாப் பெடையொடும்
    போய்வரும், நீலமுண்ட
மின்னன்ன மேனிப் பெருமா
    னுலகில்பெண் தூதுசெல்லா
அன்னன்ன நீர்மைகொ லோ,குடிச்
    சீர்மையி லன்னங்களே*
29
2507
அன்னம்செல் வீரும்வண் டானம்செல்
    வீரும் தொழுதிரந்தேன்,
முன்னம்செல் வீர்கள் மறவேல்மி
    னோகண்ணன் வைகுந்தனோ
டென்னெஞ்சி னாரைக்கண் டாலென்னைச்
    சொல்லி அவாpடைநீர்
'இன்னஞ்செல் லீரோ, இதுவோ
    தகவெ'ன் றிசைமின்களே*
30
2508
இசைமின்கள் தூதென் றிசைத்தா
    லிசையிலம், என்தலைமேல்
அசைமின்க ளென்றா லசையுங்கொ
    லாம்,அம்பொன் மாமணிகள்
திசைமின் மிளிரும் திருவேங்
    கடத்துவன் தாள்சிமயம்
மிசைமின் மிளிரிய போவான்,
    வழிக்கொண்ட மேகங்களே*
31
2509
மேகங்க ளோ*உரை யீர்,திரு
    மால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுங்களுக் கெவ்வாறு
    பெற்றீர், உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன்
    னீர்கள் சுமந்துநுந்தம்
ஆகங்கள் நோவ, வருந்தும்
    தவமாம் அருள்பெற்றதே?
32
2510
அருளார் திருச்சக் கரத்தால்
    அகல்விசும் பும்நிலனும்,
இருளார் வினைகெடச் செங்கோல்
    நடாவுதிர், ஈங்கோர்பெண்பால்
பொருளோ எனுமிகழ் வோ?இவற்
    றின்புறத் தாளென்றெண்ணோ?
தெருளோம் அரவணை யீர்,இவள்
    மாமை சிதைக்கின்றதே.
33
2511
சிதைக்கின்ற தாழியென் றாழியைச்
    சீறி,தன் சீறடியால்
உதைக்கின்ற நாயகந் தன்னொடும்
    மாலே, உனதுதண்தார்
ததைக்கின்ற தண்ணந் துழாயணி
    வானது வேமனமாய்ப்
பதைக்கின்ற மாதின் திறத்து,அறி
    யேன்செயற் பாலதுவே.
34
2512
பால்வாய்ப் பிறைப்பிள்ளை ஒக்கலைக்
    கொண்டு, பகலிழந்த
மேல்பால் திசைப்பெண் புலம்புறு
    மாலை, உலகளந்த
மால்பால் துழாய்க்கு மனமுடை
    யார்க்குநல் கிற்றையெல்லாம்
சோல்வான் புகுந்து,இது வோர்பனி
    வாடை துழாகின்றதே.
35
2513
துழாநெடுஞ் சூழிரு ளென்று,தன்
    தண்தா ரதுபெயரா
எழாநெடு வூழி யெழுந்தவிக்
    காலத்தும், ஈங்கிவளோ
வழாநெடுந் துன்பத்த ளென்றிரங்
    காரம்ம னோ*இலங்கைக்
குழாநெடு மாடம், இடித்த
    பிரானார் கொடுமைகளே*
36
2514
கொடுங்கால் சிலையர் நிரைகோ
    ளுழவர், கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும்
    கவ்வைத்து, அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப்
    பாதம் பரவிப்பெற்ற
தொடுங்கா லொசியு மிடை,இள
    மான்சென்ற சூழ்கடமே.
37
2515
கடமா யினகள் கழித்து,தம்
    கால்வன்மை யால்பலநாள்
தடமா யினபுக்கு நீர்நிலை
    நின்ற தவமிதுகொல்,
குடமாடி யிம்மண்ணும் விண்ணும்
    குலுங்க வுலகளந்து
நடமா டியபெரு மான்,உரு
    வொத்தன நீலங்களே.
38
2516
நீலத் தடவரை மேல்புண்ட
    ரிக நெடுந்தடங்கள்
போல, பொலிந்தெமக் கெல்லா
    விடத்தவும், பொங்குமுந்நீர்
ஞாலப் பிரான்விசும் புக்கும்
    பிரான்மற்றும் நல்லோர்பிரான்
கோலம் கரிய பிரான்,எம்
    பிரான்கண்ணின் கோலங்களே.
39
2517
கோலப் பகற்களி றொன்றுகற்
    புய்ய, குழாம்விரிந்த
நீலக்கங் குற்களி றெல்லாம்
    நிறைந்தன, நேரிழையீர்*
ஞாலப்பொன் மாதின் மணாளன்
    துழாய்நங்கள் சூழ்குழற்கே
ஏலப் புனைந்தென்னை மார்,எம்மை
    நோக்குவ தென்றுகோலோ*
40
2518
என்றும்புன் வாடை யிதுகண்
    டறிதும்,இவ் வாறுவெம்மை
ஒன்று முருவும் சுவடும்
    தெரியிலம், ஓங்கசுரர்
பொன்றும் வகைபுள்ளை யூர்வான்
    அருளரு ளாதவிந்நாள்
மன்றில் நிறைபழி தூற்றி,நின்
    றென்னைவன் காற்றடுமே.
41
2519
வன்காற் றறைய ஒருங்கே
    மறிந்து கிடந்தலர்ந்த,
மென்காற் கமலத் தடம்போற்
    பொலிந்தன, மண்ணும்விண்ணும்
என்காற் களவின்மை காண்மினென்
    பானொத்து வான்நிமிர்ந்த
தன்கால் பணிந்தவென் பால்,எம்பி
    ரான தடங்கண்களே.
42
2520
கண்ணும்செந் தாமரை கையு
    மவைஅடி யோஅவையே,
வண்ணம் கரியதோர் மால்வரை
    போன்று, மதிவிகற்பால்
விண்ணும் கடந்தும்பர் அப்பால்மிக்
    குமற்றெப் பால்எவர்க்கும்
எண்ணு மிடத்தது வோ,எம்பி
    ரான தெழில்நிறமே?
43
2521
நிறமுயர் கோலமும் பேரும்
    உருவும் இவையிவையென்று,
அறமுயல் ஞானச் சமயிகள்
    பேசிலும், அங்கங்கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்
    காய்நின்ற தன்றியொன்றும்
பெறமுயன் றாரில்லை யால்.,எம்பி
    ரான்றன் பெருமையையே.
44
2522
பெருங்கேழ லார்தம் பெருங்கண்
    மலர்ப்புண்ட ரிகம்நம்மேல்
ஒருங்கே பிறழவைத் தாரிவ்வ
    காலம், ஒருவர்நம்போல்
வரும்கேழ் பவருள ரே?தொலை
    வாழியம் சூழ்பிறப்பும்
மருங்கே வரப்பெறு மே,சொல்லு
    வாழி மடநெஞ்சமே*
45
2523
மடநெஞ்ச மென்றும் தமதென்றும்,
    ஓர்கரு மம்கருதி,
விடநெஞ்சை யுற்றார் விடவோ
    அமையும்,அப் பொன்பெயரோன்
தடநெஞ்சம் கீண்ட பிரானார்
    தமதடிக் கீழ்விடப்போய்த்
திடநெஞ்ச மாய்,எம்மை நீத்தின்று
    தாறும் திரிகின்றதே.
46
2524
திரிகின் றதுவட மாருதம்
    திங்கள்வெந் தீமுகந்து
சொரிகின் றதுஅது வும்அது,
    கண்ணன்விண் ணு}ர்தொழவே
சரிகின் றதுசங்கம் தண்ணந்து
    ழாய்க்குவண் ணம்பயலை
விரிகின் றதுமுழு மெய்யும்,என்
    னாங்கொலென் மெல்லியற்கே?
47
2525
மெல்லிய லாக்கைக் கிருமி,
    குருவில் மிளிர்தந்தாங்கே
செல்லிய செல்கைத் துலகையென்
    காணும்,என் னாலும்தன்னைச்
சொல்லிய சூழல் திருமா
    லவன்கவி யாதுகற்றேன்?
பல்லியின் சொல்லும்சொல் லாக்கொள்வ
    தோவுண்டு பண்டுபண்டே.
48
2526
பண்டும் பலபல வீங்கிருள்
    காண்டும்,இப் பாயிருள்போல்
கண்டு மறிவதும் கேட்பதும்
    யாமிலம், காளவண்ண
வண்டுண் துழாய்ப்பெரு மான்மது
    சூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய,மண்
    ணேரன்ன ஒண்ணுதலே*
49
2527
ஒண்ணுதல் மாம ஒளிபய
    வாமை, விரைந்துநந்தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ*
    கடாகின்று, தேன்நவின்ற
விண்முதல் நாயகன் நீள்முடி
    வெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று, அருவிசெய்
    யாநிற்கும் மாமலைக்கே.
50
2528
மலைகொண்டு மத்தா அரவால்
    சுழற்றிய மாயப்பிரான்,
அலைகண்டு கொண்ட அமுதம்கொள்
    ளாது கடல்,பரதர்
விலைகொண்டு தந்தசங் கம்இவை
    வோpத் துழாய்துணையாத்
துலைகொண்டு தாயம் கிளர்ந்து,கொள்
    வானொத் தழைக்கின்றதே.
51
2529
அழைக்கும் கருங்கடல் வெண்திரைக்
    கைகொண்டு போய்,அலர்வாய்
மழைக்கண் மடந்தை அரவணை
    யேற,மண் மாதர்விண்வாய்
அழைத்துப் புலம்பி முலைமலை
    மேல்நின்றும் ஆறுகளாய்
மழைக்கண்ண நீர்,திரு மால்கொடி
    யானென்று வார்கின்றதே*
52
2530
வாரா யினமுலை யாளிவள்
    வானோர் தலைமகனாம்,
சீரா யினதெய்வ நன்னோ
    யிது,தெய்வத் தண்ணந்துழாய்த்
தாரா யினும்தழை யாயினும்
    தண்கொம்ப தாயினும்கீழ்
வேரா யினும்,நின்ற மண்ணாயி
    னும்கொண்டு வீசுமினே.
53
2531
வீசும் சிறகால் பறத்திர்,வணி
    ணாடுநுங் கட் கெளிது
பேசும் படியன்ன பேசியும்
    போவது, நெய்தொடுவுண்
டேசும் படியன்ன செய்யுமெம்
    மீசர்விண் ணோர்பிரானார்
மாசின் மலரடிக் கீழ்,எம்மைச்
    சேர்விக்கும் வண்டுகளே*
54
2532
வண்டுக ளோ*வம்மின் நீர்ப்பூ
    நிலப்பூ மரத்திலொண்பூ,
உண்டு களித்துழல் வீர்க்கொன்
    றுரைக்கியம், ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன்
    னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும், மலருள
    வோநும் வியலிடத்தே?
55
2533
வியலிட முண்ட பிரானார்
    விடுத்த திருவருளால்,
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம்
    தோழி,ஓர் தண்தென்றல்வந்
தயலிடை யாரும் அறிந்திலர்
    அம்பூந் துழாயினின்தேன்
புயலுடை நீர்மையி னால்,தட
    விற்றென் (*)புலன்கலனே.

(*) பொலன்கலனே என்றும் பாடம்.
56
2534
(*)புலக்குண் டலப்புண்ட ரிகத்த
    போர்க்கெண்டை, வல்லியொன்றால்
விலக்குண் டுலாகின்று வேல்விழிக்
    கின்றன, கண்ணன்கையால்
மலக்குண் டமுதம் சுரந்த
    மறிகடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்றுகண் டார்,எம்மை
    யாரும் கழறலரே.

(*) பொலக்குண்டம் என்றும் பாடம்.
57
2535
கழல்தலம் ஒன்றே நிலமுழு
    தாயிற்று, ஒருகழல்போய்
நிழல்தர எல்லா விசும்பும்
    நிறைந்தது, நீண்டஅண்டத்து
உழறலர் ஞானச் சுடர்விளக்
    காயுயர்ந் தோரையில்லா
அழறலர் தாமரைக் கண்ணன்,என்
    னோவிங் களக்கின்றதே?
58
2536
அளப்பருந் தன்மைய ஊழியங்
    கங்குல்,அந் தண்ணந்துழாய்க்கு
உளப்பெருங் காதலில் நீளிய
    வாயுள, ஓங்குமுந்நீர்
வளப்பெரு நாடன் மதுசூ
    தனனென்னும் வல்வினையேன்
தளப்பெரு நீண்முறு வல்,செய்ய
    வாய தடமுலையே.
59
2537
முலையோ முழுமுற்றும் போந்தில,
    மொய்பூங் குழல்குறிய
கலையோ அரையில்லை நாவோ
    குழறும், கடல்மண்ணெல்லாம்
விலையோ எனமிளி ருங்கண்
    ணிவள்பர மே*பெருமான்
மலையோ, திருவேங் கடமென்று
    கற்கின்ற வாசகமே?#
60
2538
வாசகம் செய்வது நம்பர
    மே?,தொல்லை வானவர்தம்
நாயகன் நாயக ரெல்லாம்
    தொழுமவன், ஞாலமுற்றும்
வேயக மாயினும் சோரா
    வகையிரண் டேயடியால்
தாயவன், ஆய்க்குல மாய்வந்து
    தோன்றிற்று நம்மிறையே.
61
2539
இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண்
    டால்,என வும்மிரங்காது,
அறையோ* எனநின் றதிரும்
    கருங்கடல், ஈங்கிவள்தன்
நிறையோ இனியுன் திருவரு
    ளாலன்றிக் காப்பரிதால்
முறையோ, அரவணை மேல்பள்ளி
    கொண்ட முகில்வண்ணனே*
62
2540
வண்ணம் சிவந்துள வானா
    டமரும் குளிர்விழிய,
தண்மென் கமலத் தடம்போல்
    பொலிந்தன, தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகந்
    தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்து,அடி யேனொடிக்
    கால மிருக்கின்றதே.
63
2541
இருக்கார் மொழியால் நெறியிழுக்
    காமை, உலகளந்த
திருத்தா ளிணைநிலத் தேவர்
    வணங்குவர், யாமும்அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும்
    நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல்,திரு
    நாமச்சொல் கற்றனமே.
64
2542
கற்றுப் பிணைமலர்க் கண்ணின்
    குலம்வென்று,ஒ ரோகருமம்
உற்றுப் பயின்று செவியொடு
    சாவி, உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த
    பிரானார் திருவடிக்கீழ்
உற்றும் உறாதும், மிளிர்ந்தகண்
    ணாயெம்மை உண்கின்றவே*
65
2543
உண்ணா துறங்கா துணர்வுறும்
    எத்தனை யோகியர்க்கும்,
எண்ணாய் மிளிரும் இயல்பின
    வாம்,எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான்
    றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன்,உயி
    ராயின காவிகளே.
66
2544
காவியும் நீலமும் வேலும்
    கயலும் பலபலவென்று,
ஆவியின் தன்மை அளவல்ல
    பாரிப்பு, அசுரர்ச்செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன்
    கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன் னாள்,கண்க
    ளாய துணைமலரே.
67
2545
மலர்ந்தே யொழிந்தில மாலையும்
    மாலைபொன் வாசிகையும்,
புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற
    நாற்றி, பொருகடல்சூழ்
நிலந்தா வியவெம் பெருமான்
    தனதுவை குந்தமன்னாய்*
கலந்தார் வரவெதிர் கொண்டு,வன்
    கொன்றைகள் கார்த்தனவே.
68
2546
காரேற் றிருள்செகி லேற்றின்
    சுடருக் குளைந்து, வெல்வான்
போரேற் றெதிர்ந்தது புன்தலை
    மாலை, புவனியெல்லாம்
நீரேற் றளந்த நெடிய
    பிரானரு ளாவிடுமே?
வாரேற் றிளமுலை யாய்,வருந்
    தேலுன் வளைத்திறமே.
69
2547
வளைவாய்த் திருச்சக் கரத்தெங்கள்
    வானவ னார்முடிமேல்,
தளைவாய் நறுங்கண்ணித் தண்ணந்
    துழாய்க்குவண் ணம்பயலை,
விளைவான் மிகவந்து நாள்திங்க
    ளாண்டூழி நிற்கவெம்மை
உளைவான் புகுந்து,இது வோர்கங்குல்
    ஆயிரம் ஊழிகளே.
70
2548
ஊழிக ளாயுல கேழுமுண்
    டானென் றிலம்,பழங்கண்டு
ஆழிக ளாம்பழ வண்ணமென்
    றேற்கு,அஃ தேகொண்டன்னை
நாழிவ ளோவெனும் ஞாலமுண்
    டான்வண்ணம் சொல்லிற்றென்னும்
தோழிக ளோ*உரை யீர்,எம்மை     அம்மனை சூழ்கின்றவே.
71
2549
சூழ்கின்ற கங்குல் சுருங்கா
    இருளின் கருந்திணிம்பை,
போழ்கின்ற திங்களம் பிள்ளையும்
    போழ்க, துழாய்மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத் தொருதமி
    யாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்ற வாறிது வோ,வந்து
    தோன்றிற்று வாலியதே.
72
2550
வால்வெண் ணிலவுல காரச்
    சுரக்கும்வெண் திங்களென்னும்,
பால்விண் சுரவி சுரமுதிர்
    மாலை, பரிதிவட்டம்
போலும் சுடரட லாழிப்பி
    ரான்பொழில் ஏழளிக்கும்
சால்பின் தகைமைகொ லாம்,தமி
    யாட்டி தளர்ந்ததுவே?
73
2551
தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப்
    பாயல், திருநெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம்
    விழுங்கியும், மால்வரையைக்
கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத்
    தான்முடி சூடுதுழாய்
அளைந்துண் சிறுபசுந் தென்றல்,அந்
    தோவந் துலாகின்றதே.
75
2552
உலாகின்ற கெண்டை ஒளியம்பு,எம்
    ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத்
    தீர்,குனி சங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரியம்
    பள்ளியம் மானடியார்
நிலாகின்ற வைகுந்த மோ,வைய
    மோநும் நிலையிடமே?
75
2553
இடம்போய் விரிந்திவ் வுலகளந்
    தானேழி லார்தண்டுழாய்
வடம்போ தினையும் மடநெஞ்ச
    மே,நங்கள் வெள்வளைக்கே
விடம்போல் விரித லிதுவியப்
    பேவியன் தாமரையின்
தடம்போ தொடுங்க,மெல் லாம்பல்
    அலர்விக்கும் வெண்திங்களே.
76
2554
திங்களம் பள்ளை புலம்பத்தன்
    செங்கோ லரசுபட்ட,
செங்களம் பற்றிநின் றெள்குபுன்
    மாலை,தென் பாலிலங்கை
வெங்களம் செய்தநம் விண்ணோர்
    பிரானார் துழாய்துணையா
நங்களை மாமைகொள் வான்,வந்து
    தோன்றி நலிகின்றதே.
77
2555
நலியும் நரகனை வீட்டிற்றும்,
    வாணன்திண் டோள்துணித்த
வலியும் பெருமையும் யான்சொல்லும்
    நீர்த்தல்ல, மைவரைபோல்
பொலியும் உருவில் பிரானார்
    புனைபூந் துழாய்மலர்க்கே
மெலியும் மடநெஞ்சி னார்,தந்து
    போயின வேதனையே*
78
2556
வேதனை வெண்புரி நு}லனை,
    விண்ணோர் பரவநின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்
    அநாதனை, ஞாலம்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை
    மேல்பள்ளி கொண்டருளும்
சீதனை யேதொழு வார்,விண்ணு
    ளாரிலும் சீரியரே.
79
2557
சீரர சாண்டுதன் செங்கோல்
    சிலநாள் செலீஇக்கழிந்த,
பாரர சொத்து மறைந்தது
    நாயிறு, பாரளந்த
பேரர சே*எம் விசும்பர
    சே*எம்மை நீத்துவஞ்சித்த
ஓரர சே*அரு ளாய்.இரு
    ளாய்வந் துறுகின்றதே.
80
2558
உறுகின்ற கன்மங்கள் மேலான
    ஓர்ப்பில ராய்,இவளைப்
பெறுகின்ற தாயர்மெய்ந் நொந்து
    பெறார்கொல் துழாய்குழல்வாய்த்
துறுகின் றிலர்தொல்லை வேங்கட
    மாட்டவும் சூழ்கின்றிலர்
இறுகின்ற தாலிவ ளாகம்,மெல்
    லாவி எரிகொள்ளவே.
81
2559
எரிகொள்செந் நாயி றிரண்டுட
    னேயுத யம்மலைவாய்,
விரிகின்ற வண்ணத்த எம்பெரு
    மான்கண்கள், மீண்டவற்றுள்
எரிகொள்செந் தீவீழ் அசுரரைப்
    போலஎம் போலியர்க்கும்
விரிவசொல் லீரிது வோ,வைய
    முற்றும் விளரியதே?
82
2560
விளரிக் குரலன்றில் மென்பெடை
    மேகின்ற முன்றில்பெண்ணை,
முளரிக் குரம்பை யிதுவிது
    வாக, முகில்வண்ணன்பேர்
கிளரிக் கிளரிப் பிதற்றும்மெல்
    லாவியும் நைவுமெல்லாம்
தளரில் கொலோவறி யேன்,உய்ய
    லாவதித் தையலுக்கே*
83
2561
தையல்நல் லார்கள் குழாங்கள்
    குழிய குழுவினுள்ளும்,
ஐயநல் லார்கள் குழிய
    விழவினும், அங்கங்கெல்லாம்
கையபொன் னாழிவெண் சங்கொடும்
    காண்பான் அவாவுவன்நான்
மையவண் ணா*மணி யே.முத்த
    மே*என்றன் மாணிக்கமே*
84
2562
மாணிக்கங் கொண்டு குருங்கெறி
    வொத்திரு ளோடுமுட்டி,
ஆணிப்பொன் னன்ன சுடர்படு
    மாலை, உலகளந்த
மாணிக்க மே*என் மரதக
    மே*மற்றெhப் பாரையில்லா
ஆணிப்பொன் னே,அடி யேனுடை
    யாவி யடைக்கலமே*
85
2563
அடைக்கலத் தோங்கு கமலத்
    தலரயன் சென்னியென்னும்,
முடைக்கலத் தூண்முன் அரனுக்கு
    நீக்கியை, ஆழிசங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கன்
    றாய்ச்சிவன் தாம்புகளால்
புடைக்கலந் தானை,எம் மானையென்
    சொல்லிப் புலம்புவனே?
86
2564
புலம்பும் கனகுரல் போழ்வாய
    அன்றிலும், பூங்கழிபாய்ந்
தலம்பும் கனகுரல் சூழ்திரை
    யாழியும், ஆங்கவைநின்
வலம்புள் ளதுநலம் பாடு
    மிதுகுற்ற மாகவையம்
சிலம்பும் படிசெய்வ தே,திரு
    மால்இத் திருவினையே?
87
2565
திருமால் உருவொக்கும் மேரு,அம்
    மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச்சக்
    கரமொக்கும், அன்னகண்டும்
திருமால் உருவோ டவன்சின்ன
    மேபிதற் றாநிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,எங்
    கேவரும் தீவினையே?
88
2566
(*)தீவினை கட்கரு நஞ்சினை
    நல்வினைக் கின்னமுதை,
பூவினை மேவிய தேவி
    மணாளனை, புன்மையெள்காது
ஆவினை மேய்க்கும்வல் லாயனை
    அன்றுல கீரடியால்
தாவின ஏற்றையெம் மானைஎஞ்
    ஞான்று தலைப்பெய்வனே?

(*) தீவினைக் காருநஞ் சைந்நல் வினைக்கின் னமுதத்தினை என்றும் பாடம்.
89
2567
தலைப்பெய்து யானுன் திருவடி
    சூடுந் தகைமையினால்,
நிலைப்பெய்த ஆக்கைக்கு நோற்றவிம்
    மாயமும், மாயம்செவ்வே
நிலைப்பெய் திலாத நிலைமையுங்
    காண்டோ றசுரர்குழாம்
தொலைப்பெய்த நேமியெந் தாய்,தொல்லை
    யூழி சுருங்கலதே.
90
2568
சுருங்குறி வெண்ணெய் தொடுவுண்ட
    கள்வனை, வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெருவயிற்
    றாளனை, மாவலிமாட்டு
இருங்குறள் ஆகி இசையவோர்
    மூவடி வேண்டிச்சென்ற
பெருங்கிறி யானையல் லால்,அடி
    யேன்நெஞ்சம் பேணலதே.
91
2569
பேணல மில்லா அரக்கர்முந்
    நீர பெரும்பதிவாய்,
நீணகர் நீளெரி வைத்தரு
    ளாயென்று, நின்னைவிண்ணோர்
தாணிலந் தோய்ந்து தொழுவர்நின்
    மூர்த்திபல் கூற்றிலொன்று
காணலு மாங்கொலென் றே,வைகல்
    மாலையுங் காலையுமே.
92
2570
காலைவெய் யோற்குமுன் னோட்டுக்
    கொடுத்தகங் குற்குறும்பர்
மாலைவெய் யோன்பட வையகம்
    பாவுவர், அன்னகண்டும்
காலைநன் ஞானத் துறைபடிந்
    தாடிக்கண் போது,செய்து
மாலைநன் னாவில்கொள் ளார்,நினை
    யாரவன் மைப்படியே.
93
2571
மைப்படி மேனியும் செந்தா
    மரைக்கண்ணும் வைதிகரே,
மெய்ப்படி யாலுன் திருவடி
    சூடும் தகைமையினார்,
எப்படி யூரா மிலைக்கக்
    குருட்டா மிலைக்குமென்னும்
அப்படி யானும்சொன் னேன்,அடி
    யேன்மற்று யாதென்பனே?
94
2572
யாதானு மோராக் கையில்புக்கு,அங்
    காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்
மூதாவி யில்தடு மாறும்
    உயிர்முன்ன மே,அதனால்
யாதானும் பற்றிநீங் கும்விர
    தத்தைநல் வீடுசெய்யும்
மாதா வினைப்பிது வை,திரு
    மாலை வணங்குவனே.#
95
2573
வணங்கும் துறைகள் பலபல
    ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல
    ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கிநின்
    மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண்
    வேட்கை எழுவிப்பனே.
96
2574
எழுவதும் மீண்டே படுவதும்
    பட்டு,எனை யூழிகள்போய்க்
கழிவதும் கண்டுகண் டெள்கலல்
    லால்,இம யோர்கள்குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை
    மாலைக்கண் ணாரக்கணடு
கழிவதோர் காதலுற் றார்க்கும்,உண்
    டோகண்கள் துஞ்சுதலே?
97
2575
துஞ்சா முனிவரும் அல்லா
    தவருந் தொடரநின்ற,
எஞ்சாப் பிறவி இடர்கடி
    வான்,இமை யோர்தமக்கும்
தன்சார்வி லாத தனிப்பெரு
    மூர்த்திதன் மாயம்செவ்வே
நெஞ்சால் நினைப்பரி தால்,வெண்ணெ
    யூணென்னும் ஈனச்சொல்லே.
98
2576
ஈனச்சொல் லாயினு மாக,
    எறிதிரை வையம்முற்றும்
ஏனத் துருவாய் இடந்தபி
    ரான்,இருங் கற்பகம்சேர்
வானத் தவர்க்குமல் லாதவர்க்
    கும்மற்றெல் லாயவர்க்கும்
ஞானப் பிரானையல் லாலில்லை,
    நான்கண்ட நல்லதுவே.#
99
2577
நல்லார் நவில்குரு கூர்நக
    ரான்,திரு மால்திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய,
    மாறன்விண் ணப்பஞ்செய்த
சொல்லார் தொடையலிந் நூறும்வல்
    லார்அழுந் தார்பிறப்பாம்
பொல்லா அருவினை, மாயவன்
    சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே.#
100
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com